ஆதீண்டு குற்றி…

--

மனிதனுக்குத் தினவு ஏற்பட்டால் கையால் சொறிந்து கொள்கிறான். ஆடு மாடுகளுக்குத் தினவு ஏற்பட்டால் அவற்றால் எப்படிச் சொரிந்து கொள்ள முடியும்? அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவை, அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.

இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆதி காலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்.

இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலையை நாடிச் செல்கின்றன. சேற்றை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு சேறு காயும் போது தினவு ஏற்படுகிறது. உடன் குற்றியை நோக்கிச் செல்கின்றன.

இவ்வாறு தினவைத் தீர்க்க நடப்படும் குற்றியை “ஆதீண்டு குற்றி”, “மாதீண்டு துறுகல்” என சங்க இலக்கியங்கள் விதந்து உரைக்கின்றன. இவ்வாறு கல் நடப்படும் வழக்கம் வரலாற்று காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. ஆதறி என்பது ஆதீண்டு குற்றியினின்றும் வேறானது.

ஆதறி என்பது ஆடு மாடுகளின் கட்டுத்தறியைக் குறிப்பதாகும். “ஆவுருஞ்சு தறி” என்பதே ஆதீண்டு குற்றியாகும்! தொல்காப்பியர் காலத்திலும் இவ்வகை “ஆதீண்டு குற்றிகள்” வழக்கில் இருந்ததென்பதை உரையாசிரியர்களின் உரைக் குறிப்பால் அறிகிறோம்.

ஒன்றொழி பொதுச்சொல் பற்றி கூறும் தொல்காப்பியம் 49-ஆம் (சொல்) சூத்திரத்திற்குப் பொருள் கூற வந்த சேனாவரையர் பல பொருட்குப் பொதுவாகிய சொல்லைப் பற்றிக் கூறும் போது “ஆதீண்டு குற்றி” என்ற சொல்லை மேற்கோள் காட்டுகிறார்.

“ஆதீண்டு குற்றி”

பசுக்கள் தீண்டுவதற்கென்றே நடப்பட்டிருந்த போதிலும் பிற விலங்குகளும் தீண்டும் என உரைக்கிறார். எனவே “ஆதீண்டு குற்றி” என்பது பல விலங்குகளும் உராய்வதற்காக நடப்பட்ட கல் என பொருள் கொள்ள வேண்டும்.

கல்லாடனார் தம் தொல்காப்பிய, சொல் விருத்தி உரையில் தலைமை பற்றியும், சிறுபான்மை பற்றியும் வரும் சொல்லுக்கு இதை மேற்கோள் காட்டுகிறார். இளம்பூரணர் ஆணொழி மிகுசொல், பெண்ணொழி மிகுசொல் அன்றிப் பொதுவாய் நிற்கும் சொல்லுக்கு ஆதீண்டு குற்றியைச் சான்று காட்டுகிறார்.

“மாதீண்டு துறுகல்”

சேனாவரையரின் கருத்திற்கு அணி சேர்ப்பது போன்றே ஆதீண்டு குற்றியில் பிற விலங்குகளும் உரசிக் கொண்டன என்பதைச் சங்க இலக்கியக் குறிப்புக்களால் அறிகிறோம். மிருகங்கள் உரைவதற்காகக் குற்றவாளிகளின் வீட்டின் முற்றத்தில், விலங்குகள் தினவு தீர உராயும் பொற்றைக்கல் இருந்தது.

இதை ஐங்குறுநூறு (277:1–2) “மாதீண்டு துறுகல்” என குறிக்கிறது. மா என்பது விலங்கு; துறுகல் என்பது பொற்றைக் கல். இவ்வகை குத்துக் கற்களுக்குப் பொற்றைக் கற்களையே பயன்படுத்தினர். எனவே இது “ஆதீண்டு துறுகல்” எனப் பெற்றது.

இறைவன் அருட்குறியாகக் கல் தறி நடப்பதை பழமுதிர்ச் சோலையில் இருந்ததைத் திருமுருகாற்றுப்படை (226) கூறும். கந்தினும் என்பதற்கு ஆதீண்டு குற்றியையுடைய இடத்தினும் என்பர் நச்சினார்க்கினியர் யானைத்தறியிடத் தென பாரும் உளர்.

“யானை உருஞ்சிய துறுகல்”

யானை உரசியதால் மாசு ஏறிய துறு கல்மழையால் தூய் ஐமயான செய்தியைக் குறுந்தொகை (13) சுட்டுகிறது. இக்கல்லின் குளிர்ந்த இடத்தே தலைவனும் தலைவியும் தங்கினர் என்பதை மேற்படி பாடல் காட்டும்!

அம்பலங்களில் நடப்பட்டிருக்கும் நெடிய தூண்களையே துறுகல்லாக கருதி யானைகள் தம் உடம்பை உரிஞ்சிய செய்தியை பட்டினப்பாலை உரைக்கிறது (250–51). பசுக்கள் உரிஞ்ச அமைக்கப்பட்ட இத்தம்பங்கள் (சீவகசிந்தாமணி: 419 உரை) மரத்தாலும் செய்யப்பட்டு நடப்பட்டிருந்தன.

தற்காலத்தில் இது போன்ற குற்றிகள் உள்ளதா? என ஆய்வு செய்தபோது சில குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன.

தருமபுரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் நீர் நிலைகளை ஒட்டி பல குத்துக்கற்கள் நடப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, மாடுகள் முள் புதர்களில் மேயும் போது தினவு ஏற்படுகிறது. அவற்றின் தினவைத் தீர்க்க உரசிக்கொள்ள நடப்பட்டவை எனக் கூறுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குளக்கரைகளில் பலகைக்கல் குற்றிகள் நடப்பட்டு இருப்பதைக் காணலாம். கும்பகோணம், நன்னிலம் வட்டங்களில் சில குற்றிக்கற்கள் (குத்துக்கற்கள்) கல்வெட்டுடன் காணப்படுகின்றன.

சேலம் மாவட்டத்திலும் இவ்வகைக் குற்றிகள் ஆற்றங்கரை, ஏரிக்கரை, ஓடைக்கரை முதலிய பகுதிகளில் மிகுதியும் காண்கிறோம். இதை சன்னாசிக்கல் என்று அழைக்கின்றனர். மாடுகள் உராய்வதற்கே அன்றி அவற்றிற்கு நோய்கள் வந்தால் இக்கல்லை வழிபாடு செய்யும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.

இவற்றுள் இயந்திரங்கள், சூலக்குறிகள், ஐந்தெழுத்து மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் மல்லியகரை என்ற ஊரில் இரண்டு ஆதீண்டு குற்றிகள் கல்வெட்டுடன் உள்ளன. ஆரியபாளையம் என்ற ஊரில் குளக்கரையில் நடப்பட்டுள்ள கல்லில் பின்வரும் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கால்நடைகள் உலரயும் இக்கல்லை “ஆ ஒஞ்சிக் கல்லு”, “ஆ உருஞ்சிக் கல்லு” என்று அழைக்கிறார்கள். உருஞ்சுதல் என்றால் உரைதல் என்று பொருள்.

கோவை மாவட்டத்தில் மதுக்கரை ஆற்றுப் படுகையில் வழுக்கப்பாறை என்ற இடத்தில் “ஆ நோஞ்சிக் கல்” ஒன்று காணப்படுகிறது!

ஐதராபாத் அருகில் உப்பல் என்ற கிராமத்தில் மர நிழலில் இதைப் போன்ற “ஆதீண்டு குற்றி” ஒன்று காணப்படுகிறது.

சென்னை அடுத்துள்ள சேலையூரில் குளக்கரையில் மந்தைக்கல் என்னும் பெயரில் ஒரு “ஆதீண்டு குற்றி” காணப்படுகிறது. அதில் சூலம், வில், அம்பு போன்ற குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன.

உத்தண்டி, பூண்டிபஜார், மடிப்பாக்கம் ஆகிய ஊர்களிலும் இவ்வகை ஆதீண்டு குற்றிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை ஊரார் மந்தைக்கல் என வழங்குகின்றனர். மாடுகள் உராய்வதற்கே அன்றி, நோய் தீர இக்கற்களுக்கு ஊரார் வழிபாடும் செய்கின்றனர்!

முடிவுகள்

விலங்குகள் உரைவதற்காக நடப்படும் கல்லே ஆதீண்டு குற்றி, மாதீண்டு துறுகல் என சங்க இலக்கியங்கள் அழைக்கின்றன

கல்லாலும் மரத்தாலும் அமைந்த இவை மரபு மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன

இவை மந்தைக்கல், உரைகல், உருஞ்சிக்கல், குற்றிக்கல் என பலபடப் பேசப்பட்டு வருகின்றன.

--

--

தஞ்சை ஆ.மாதவன்

Archaeologist | PhD Research Scholar | Researcher in Prehistoric Archaeology | Lover of Anthropology, Astrobiology, Paleontology | Data Scientist